மனிதன் எப்படி வாழ வேண்டும்...?

பூமியில் பிறப்பெடுத்த மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது.

ஆனால்!, விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்தக் கன்றுக்குப் பசு தயாரானதும் பசு வேறு கன்று வேறு என்றாகி விடும்.

அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன.

ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு பறவையும், ஒவ்வொரு தாவரமும், ஒவ்வொரு புழுவும் தங்கள் பிழைப்பை தாங்களே கவனித்துக் கொள்கின்றன. ஆனால்!, மனிதன் மட்டும் தான் தன் பிழைப்பிற்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கிறான்.

குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்து அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ்நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

வளர்வதற்குப் பெற்றோர் உதவி தேவை. படிப்பதற்கு ஆசிரியர் உதவி தேவை. தலைமுறைக்கு பெண்ணின் உதவி தேவை. இப்படி அவனின் ஒவ்வொரு நொடியிலும் பிறரிடமிருந்து அவன் பெற்றுக் கொள்வது அதிகம்.

ஆனால்!, தற்போதைய காலத்தில் பெற்றுக் கொள்பவன் பிறருக்கு கொடுக்க மறுக்கிறான். அதைப் பணம் என்ற அளவுகோலைக் கொண்டு நான் ஏன் கொடுக்க வேண்டும்...? என்று பொய்ப்பேச்சால் (விதண்டாவாதம்)  கேள்வி கேட்கின்றான்.

இது ஒரு உண்மை சம்பவம்...!

ஒருவர் தன் நண்பரின் கடைக்குச் சென்றிருந்த போது அழகிய பெண் ஒருவர் வந்து ஐநூறு ரூபாய்க்கு கரிக்கோல் (பென்சில்) மற்றும் எழுதுகோல்கள் (பேனாக்கள்) வாங்கிச் சென்றிருக்கிறார்.

கடையின் நண்பர், ”இப்பெண்ணைப் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாய் தெரிகிறதா...?” என்று கேட்டிருக்கிறார்.

”ஒன்றும் தெரியவில்லையே” என்றார் வந்தவர்.

“இப்பெண் எப்போது சாகும் என்று தெரியாது. முற்றிய நிலையில் புற்றுநோயால் அவதிப்படுகிறார்...!

ஆனால்!, அப்பெண்ணின் முகத்தில் அதற்கான ஏதாவதொரு அறிகுறி தெரிகிறதா...? இந்தச் சூழலிலும் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார்.

வாங்கும் சம்பளத்தில் ஐநூறு ரூபாயை தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய அனாதை விடுதிக்கு கரிக்கோல் மற்றும் எழுதுகோல் வாங்கிக் கொடுத்து வருகிறார் “ என்றார் கடையின் நண்பர்.

மேலே இருக்கும் நிகழ்வைக் கேட்டதும் கடைக்கு வந்த நண்பருக்கு அந்தப் பெண்ணின் நன்றி மறவாமையை நினைத்து சில மணித்துளிகள் மகிழ்ச்சியாக இருந்தது. அவரின் உடல் நிலையை நினைத்து  அவரது மனம் கனத்தது.

ஆம் நண்பர்களே...!

🟡 மனிதன் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டதை ஒரு நாள் திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டும்...!

🔴 இங்கு நாம் பெற்றிருப்பது எதுவுமே நம்முடையது அல்ல. நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் நமக்கு கொடுத்துச் சென்றது...!!

⚫ ஆனால்!, மனிதன் அதை மறந்து வாழ்கிறான். அதனால் துன்பத்தில் உழல்கிறான்...!!!

உடுமலை சு. தண்டபாணி

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.