இரக்கம் காட்டுவோம்.

இரக்கமற்றவர்களை நாம் மனிதர்கள் என்றுக் கூறவியலுமா...? இரக்கமே ஒரு மனிதனை நாகரீகமானவன் ஆக்குகிறது. மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது...

அனைவரும் அடுத்தவர் மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் கலகங்கள் ஏது...? வாதங்கள் ஏது...? 

மனம் மென்மைப்படும் பொழுது இரக்க உணர்வு தாமாகவே மனதில் எழுகிறது. ஆதிமனிதன் நாகரீகம் அடைந்ததன் வெளிப்பாடு தான் அவனது இரக்க உணர்வு...

மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன, தாய்ப்பறவை எங்கோ சென்று இரை தேடிக் கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்டத் திரும்பி வந்த போது திடுக்கிட்டு அலறியது...

ஒரு அரவம் (பாம்பு) மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பதுவே அதன் நோக்கம்...

தாய்ப் பறவையால் அந்த அரவத்தினை என்ன செய்யவியலும்...?

சேடனே...! சேடனே...!! எங்களை விட்டு விடுங்கள் என்றபடி கரைந்தவாறு கெஞ்சியது அந்தத் தாய்ப்பறவை...! (சேடன்-பாம்பு)

திரும்பிப் பார்த்த சேடனோ! , “ஏன் எதற்காக ஓலமிடுகிறாய்...?” என்றது.

“அண்ணா! நீங்கள் எவ்வளவு பெரியவங்க! உங்களைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் எங்கள் மேல் நீங்க இரக்கப்படக் கூடாதா..?” எனக் மெல்லியக் குரலில் கெஞ்சியது பறவை..

“அப்படியா...?” என்றது சேடன்.

“அண்ணா என் குழந்தைகளை விட்டு விடுங்கள்! நாங்கள் பிழைத்துக் கொள்கிறோம்”

“நான் கேட்பதற்குச் சரியான பதிலைச் சொல்லி விட்டால், நான் உன் குழந்தைகளை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறேன்” என்றது அந்த அரவம்...

“கேளுங்க அண்ணா” சொல்கிறேன் என்றது தாய்ப் பறவை...

“உன் வாயில் தற்போது என்ன வைத்திருக்கிறாய்...?”

“என் குஞ்சுகளுக்குச் சிறிது இரை கொண்டு வந்து இருக்கிறேன் அண்ணா...!”

“என்ன இரை அது...?”

“சிறிய புழுக்கள் அண்ணா...!”

“உன் குழந்தைகளின் இரைக்காகச் சென்ற நீ, அந்தப் புழுக்களுக்கு இரக்கம் காட்டவில்லை, ஆனால், என்னிடம் மட்டும் இரக்கம் காட்டச் சொல்கிறாயே...!"

சேடன் கேட்ட அந்தக் கேள்விக்கு அந்தப் பறவையால் எந்த பதிலும் கூற இயலவில்லை...

இதுதான் நமது வாழ்க்கையின் நியதி...!

உன்னை விட பலம் குறைந்தது உனக்கு இரையாகிறது...!

என்னை விடப் பலம் குறைந்தது எனக்கு இரையாகிறது...!!

இப்படி இல்லாமல் தானே உற்பத்தி செய்து வாழ வழி இருக்கிறவர்கள் மனிதர்கள் தான், ஆனால், அவர்களே அப்படி வாழ்வதில்லை, பல உயிரினங்களைக் கொன்று உண்டு வாழ்ந்து வருகிறார்கள்...

இப்படிப்பட்ட சூழலில் என்னை இரக்கம் காட்டச் சொல்வது சரிதானா...?

நீயே ஆலோசித்துக் கொள். இன்று நீ என்னை அண்ணா என்று அன்போடு பலமுறை அழைத்தாய், அந்த மகிழ்ச்சியில் இன்று உன் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தையும் நான் விளைவிக்கப் போவதில்லை.

என் பசிக்கு நான் வேறு வழியைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றபடி அந்த அரவம் சென்று விட்டது...

சேடன் சென்ற அந்தத் திசையைப் பார்த்துத் திகைத்து நின்றது தாய்ப் பறவை...!

ஆம் நண்பர்களே...!

அனைத்து உயிர்களிடத்தில் இரக்கம், அன்பு செலுத்துவோம், உயிர்களிடத்திலும் இரக்கமாக இருப்பது நமது நோய் எதிர்ப்புத் திறன் அமைப்பிற்கு சிறந்தது. அது மனிதர்களின் அகவையை நீட்டிக்கும், இதை நீங்கள் பணம் கொடுத்துப் பெற வேண்டாம். இது எளிமையான ஒன்று...!"

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.