இன்றைய சிந்தனை.

நாம் எதிரிகளே இல்லாத வாழ்க்கை வாழ விரும்புகிறோம். அது தவறு. எதிரிகள் நமக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தருவார்கள். அவைகளை நாம் கற்றுக் கொண்டால் தான் பலம் பெற முடியும். 

கபீர்தாஸ் என்ற துறவி, ‘எதிரிகள் தான் எனக்கு ஆசான்கள். என்னை நானே திருத்திக் கொண்டு, நான் முழுமையாக மனித வாழ்க்கை வாழ அவர்கள் என்னைத் தூண்டுகிறார்கள். 

அதனால் எதிரிகள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை’ என்றார். இந்தக் கூற்று, மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். நமக்கு எதிரிகள் இல்லாவிட்டால் நமது குறைகளே நமக்குத் தெரியாது.

எந்த நேரம் நம்மைப் பற்றி என்ன விமர்சனம் வருமோ என்று நாம் விழிப்புடன் இருக்க நமது எதிரிகள் தான் உதவுகிறார்கள். 

அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. 

நம்மையும் சிலர் உற்று நோக்குகிறார்கள் என்ற எண்ணம் நம்மை ஒவ்வொன்றிலும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது. 

அந்த வகையில் நம் திறமைகளைப் பெருக்கிக் கொள்ள எதிரிகள் ஒரு தூண்டுகோலாக இருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் ஒரு தூண்டுகோல் தேவை. 

நாம் எங்கேயாவது சோர்ந்து உட்கார்ந்து விடாமல் இருக்க அந்தத் தூண்டுகோல் தான் உதவுகிறது.

எதிரிகளே இல்லாத அரசனுக்கு வெற்றி என்பது கிடையாது. அப்படிப்பட்டவர்களுக்கு சரித்திரத்திலும் இடம் கிடையாது. ஒரு அரசனின் அத்தனைப் புகழுக்கும் காரணம் அவரது எதிரிகள் தான். 

ஒருவரது வீரமும், விவேகமும் எதிரிகள் முன்னிலையில் தான் பறை சாற்றப்படுகிறது. அப்படியானால் எதிரிகள் மதிப்பிற்கு உரியவர்கள் தானே!

எதிரிகளை சந்திக்கத் தயாராக இல்லாதவர்களால் வெற்றியை எட்டவே முடியாது. பெரிய தொழிலதிபர்களிடம் கேட்டால் அவர்கள் எதிரிகளைப் பற்றித் தான் நிறைய தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களைப் பற்றித் தான் நிறைய கதைகளைச் சொல்வார்கள்.

நாடகக் கொட்டகையில் டிக்கெட் கிழித்துக் கொண்டு இருந்தவர் உலகம் போற்றும் நாடக எழுத்தாளரானது அவரது எதிரிகளால் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அவர் ஒரு நாடகத்தை பார்த்து விட்டு சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்தார். அதனால் கடுப்பாகிப் போன பிரபல நாடக நடிகர்,

‘உனக்கு என்ன தெரியும்? நீ என்ன பெரிய நாடக எழுத்தாளரா?’ என்ற கேள்வியை எழுப்பி, அவரை குறை சொன்னார்.

அந்த எதிரியால் தான் அவருக்குள்ளே இருந்த எழுத்தாளர் வெளிப்பட்டார். அவர் யார் தெரியுமா? அவர் தான் ஷேக்ஸ்பியர்!

ஆனால் ஒரு உண்மையை எல்லோரும் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். யாராலும் எதிரிகளை நேசிக்க முடியாது. 

அவர்களை அழைத்து, உங்களால் தான் நான் உயர்ந்தேன் என்று விருந்து வைக்கவும் முடியாது. 

அதே நேரத்தில் அவர்களை நினைத்து மன அழுத்தம்  ஏற்படுவதையாவது தவிர்க்கலாம் அல்லவா!

ஆம் .,நண்பர்களே ..

எதிரிகள் என்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.. உணர்ந்து கொள்ளப்பட வேண்டியவர்கள். எதிரிகளை இதுவரை உணரவில்லை என்றால் தேடுங்கள் .அவர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்க ஆரம்பியுங்கள்.

எதிரிகளை நினைத்து வேதனைப்படாமல், தற்போது இருப்பதை விட சிறப்பாக அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். 

அப்படி உறுதி எடுத்துக் கொள்ளும் போது பலவிதமான புதிய வழிகள் தோன்றும். முயற்சி நம் முன்னே வந்து நிற்கும். அதுதான் வெற்றிக்கான வழி.

நாம் செய்யும் செயல்களில் எப்படியும் குறைகள் இருக்கத் தான் செய்யும். நம்மைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் அந்தக் குறைகளைக் கூறத் தயங்குவார்கள். 

ஆனால் எதிரிகள் அந்தக் குறைகளைத் தயங்காமல் கூறுவார்கள். 

அதை நினைத்து வருத்தப்படாமல் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோம் என்றால் நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.

 உடுமலை சு.தண்டபாணி 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.